சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம்.
சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்..,
4. Departures:
மரணத்தை சூழ்ந்திருக்கும் மர்மமே அதன் மீதான பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த பயமே மரணத்தை சார்ந்து இருப்பவர்கள் மீதான அசூசையும் வெறுப்பையும் இயல்பாகவே உருவாக்கி விடுகிறது. அப்படி மரணத்தை சார்ந்த ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் ஒரு இசை கலைஞன் மீதான வெறுப்பும் அசூசையும் அன்பாக மாறும் அற்புதம் தான் "Departures". செல்லோ (பெரிய வயலின்) கலைஞனான நாயகனின் இசை குழு கலைக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக இறந்தவர்களுக்கு மேக்கப் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேர்கிறான். இறந்த வீடுகளில் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் அந்த வேலையை வெறுத்த அவனும் மற்றவர்களும் அந்த வேலை மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியை உணர்வது தான் கதை.
மொத்த படமுமே மரணத்தை சுற்றியே நடக்கிறது ஆனாலும் நம் கண்ணுக்கு க்ளிசெரின் ஊற்ற முயற்சிக்காமல் ஒரு உன்னதமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். தெளிவான தேவையற்ற காட்சிகளற்ற திரைக்கதை, அற்புதமான இசை, பலமான உரையாடல்கள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவு குறைகள் ஏதும் இல்லாத அற்புதமான படம். இந்த படம் 2008-ம் ஆண்டிற்க்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.
3. Final Cut - Ladies and Gentlemen :
முதலில் இது ஒரு திரைப்படம் அல்ல, 450-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் காட்சி துணுக்குகளின் தொகுப்பு. என்ன தான் எண்ணற்ற திரைப்படங்களின் கதம்ப மாலை என்றாலும் அவற்றின் துணையோடு ஒரு சின்ன கதையையும் சொல்லி இது வரை இருந்த கதை சொல்லும் பாணியை எல்லாம் அனாயசயமாக தாண்டி இருக்கிறார்கள். பஸ்டர் கீடன் தொடங்கி ராம் சரண் தேஜா வரை, Birth of the Nation தொடங்கி ஓம் ஷாந்தி ஓம் வரை, 2001 தொடங்கி அவதார், Pulp Fiction தொடங்கி Paprika வரை உலகின் அத்தனை கிளாசிக்கிலும் அத்தனை முக்கியமான படங்களையும் தொட்டு செல்கிறது.
நமக்கு ரொம்ப பிடித்த படத்தின் ஒரு காட்சி எதோ ஒரு படத்தில் வந்தாலே உற்சாகமாய் இருக்குமல்லவா இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து படங்களில் இருந்தும் ஒரு துணுக்கு வந்து விடுவதால் மனதிற்க்குள் ஒரு மாதிரி இதமான உணர்வு ஏற்படுகிறது. படம் மட்டுமல்ல படம் முடிந்த பின்னர் அனைத்து படங்களின் பெயரையும் காட்சிகளின் வரிசையிலையே போடுகின்றனர் பெரும்பாலனவர்கள் அனைத்தையும் நின்று பார்த்துவிட்டு சென்றனர். திரைப்பட காதலர்கள் அனைவரும் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.
2. Holy Motors:
பார்ப்பவர்களின் கண்களுக்கும் மூளைக்கும் இடையில் கண்ணாமூச்சு விளையாடும் வித்தியாசமான சர்ரியலிஸ திரைப்படம். ஒரு நடிகனுக்கு ஒரு நாளில் ஒன்பது இடங்களில் நடிப்பதற்க்கான பட்டியல் ஒன்று தரப்படுகிறது. நடிப்பென்றால் நாடகத்திலோ திரைப்படத்திலோ அல்ல நிஜ வாழ்க்கையில் அதாவது கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். எது நிஜ வாழ்க்கை ?? எது நடிப்பு என்றெல்லாம் பிரிக்க முடியாத படி அங்காங்கே சில வட்டங்களின் முனைகளை இணைத்து சென்று இருக்கிறார்கள்.
அரசியல்வாதி, பிச்சைகாரன், சினிமாவில் மோஷன் கேப்சர் ஆர்டிஸ்ட், பைத்தியம், கொலை செய்பவன், கொலை செய்யப்படுபவன், இசை கலைஞர், சாக காத்திருக்கும் கிழவர், குடும்ப தலைவர் என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை எந்த பிழையும் செய்து இருக்கிறார் நாயகன் Denis Lavant. எந்த தர்க்கத்துக்குள்ளும் அடங்காத கதையாக இருந்தாலும் படம் ஓடும் 100 நிமிடங்களும் தலையை திருப்பாமல் பார்க்க வைக்கின்றனர். படத்தில் ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் இசை அதிலும் குறிப்பாக அந்த தீம் மியூசிக். நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டு பாருங்க இரத்ததில் ஏதோ ஒரு திரவம் கலந்து இருக்கையில் இருந்து சில மில்லி மீட்டர்கள் மேலே செல்வதை உணர்வீர்கள்.
1. Amour:
இந்த வருட திரைப்பட விழாவில் நான் பார்த்த முதல் திரைப்படம் சந்தேகமே இல்லாமல் நான் பார்த்த சிறந்த படமும் இதுவே. வாழ்க்கையில் சுகமான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது நமது எல்லா பயணங்களும் ஒரு தோல்வியை நோக்கி ஒரு சூன்யத்தை நோக்கி அல்லது ஒரு மரணத்தை நோக்கியே இருக்கிறது. வயதான தம்பதிகளான ஜார்ஜ் மற்று ஆன்னி பெரிய வீட்டில் தனியா வசிக்கின்றனர். வயதானாலும் அன்யோன்யமும் காதலும் குறையாமல் இருக்கிறது அதிலும் ஜார்ஜ் எப்போதும் ஆன்னியை விட்டு எப்போதும் விட்டு விலகாமலே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்னி தீவிரமாக உடல்நிலை மோசமாகி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவின் துயரமும் காதலின் கடைசி அத்தியாயமும் தான் படத்தின் களம்.
படத்தின் தொடக்க காட்சியிலேயே படத்தின் முடிவை யூகித்து விடலாம் ஆனால் படத்தின் பலம் முடிவு ஏற்படுத்தும் அதிர்ச்சி அல்ல அதை நோக்கிய பயணம் ஏற்படுத்து வலியே. படத்தை இயக்கி இருப்பது உலகின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான Micheal Hanake கதாப்பாத்திரங்கள் உணரும் வலியை பார்வையாளர்களுக்கு கணமான காட்சிகளின் மூலம் கட்த்தி இருக்கிறார். படம் பார்த்த பின் ஏற்படும் பாதிப்பு நீங்க நிச்சயம் கொஞ்ச காலமாவது பிடிக்கும். இந்த படம் குறித்து கொஞ்சம் விரிவாக தனி பதிவா எழுதிட விருப்பம். விருப்பத்தை சோம்பேரித்தனம் வென்று விடாமல் இருப்பின் கண்டிப்பாக எழுதுவேன்..
முதலில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ராணி சீதை ஹாலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 300 - 400 இருக்கைகள் கொண்ட ராணி சீதை ஹால் வாசலில் கிட்ட தட்ட 1000 பேர் நின்றனர் எப்படியோ அடித்து பிடித்து உட்கார்ந்தால் படச்சுருள் வராததால் திரையிடல் இல்லை என அறிவித்தனர். பின்னர் 8 மணிக்கு சின்ன அரங்கான Woodlands Symphony-ல் திரையிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் கூட்டம் காரணமாக 1400 இருக்கைகள் கொண்ட Woodlands அரங்கில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைய கூட்டத்தோடு ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு தீம் இசைக்கும் கைதட்டலால் விருது கொடுத்து கொண்டிருந்தனர். தமிழ் சினிமா பற்றி தெரியாத யாரிடமாவது இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த படம் என்று சூடம் அணைத்து சொன்னால் கூட நம்பி இருக்க மாட்டார்கள். சில அலைச்சல்கள் சில ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்தமாக ஒரு நல்ல அனுபவத்துடன் திரைப்பட விழா இனிதாய் நிறைவடைந்தது.