5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும் காதலித்து இருக்கிறீர்களா ?
            இந்த கேள்விகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் பதில் ஆம்  எனில இது உங்களுக்கான படம்...,


        இது எப்படிப்பட்ட படம் என்று மேலே இருக்கும் பத்தியை படிக்கும் போதே ஒருவாறாக கற்பனை செய்து இருப்பிர்கள் ஆனால் இது ஒரு அனிமேஷன் படமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா.., Yes it is :) . 5 Centimeters Per Second என்ற படத்தின் தலைப்பு செர்ரி பூக்களின் இதழ்கள் உதிர்ந்து விழும் வேகமாகும். இந்த தலைப்பு மனித வாழ்க்கையின் மந்த தன்மையையும் ஒன்றாய் இருக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலக தத்தம் வாழ்க்கைகாய் விலகி செல்வதின் குறியீடு அப்புடின்னு நா ஒண்ணும் கண்டுபிடிக்கல விக்கிபீடியா சொல்லுது :).  62 நிமிடங்கள் மட்டுமே ஓட கூடிய மிக சிறிய படமான இது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது..,

Episode I : Chasing Cherry Blossoms

     மத்திய தொண்ணூறுகளில் படத்தின் முதல் பகுதி நடக்கிறது. ஆரம்ப பள்ளியின் இறுதி நாளில் நெருங்கிய நண்பர்களான டகாகி மற்றும் அகாரி பள்ளி முடிந்து வருகின்றனர். அகாரியின் பெற்றோர் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் இனி பார்க்க முடியாது என்றாலும் அடுத்த வருடம் இதே காலத்தில் அவனுடன் இருக்க விரும்புவதாகவும் கூறி செல்கிறாள் அதன் பிறகு  இருவரும் கடிதம் மூலமே உரையாடி கொள்கின்றனர். ஒரு வருடம் கழித்து அவளை பார்ப்பதற்க்காக டகாகி ரயிலில் அகாரி ஊரை நோக்கி செல்கிறான். அன்று இரவு 7 மணிக்கு சந்திப்பதாக அகாரியை சந்திப்பதாக போட்ட ப்ளான் கடும் பனி பொழிவினால் ரொம்பவே சொதப்பி விடுகிறது. 8.30 மணிக்கு பாதி தூரம் மட்டுமே சென்று இருக்கிறான். இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை நீங்களே பாருங்கள்.

Episode II :Cosmonaut

          செல் ஃபோனும் இன்டர்நெட்டும் அறிமுகமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் படத்தின் இரண்டாம் பகுதி நடக்கிறது. காலப்போக்கில் அகாரி உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்ட டகாகி புதிய பள்ளியில் யாருடனும் ஒட்டாமல் தனியாகவே இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் சுமேடா டகாகியை பார்த்த நாள் முதலே காதலிக்க தொடங்கிவிடுகிறார் ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்த தைரியமின்றி இருக்கிறாள். கொஞ்ச காலத்தில் இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது ஆனாலும் அதற்கு மேல் அவளால் நெருங்க முடியவில்லை. இருவரும் தனியாக இருக்கும் சமயத்தில் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து தோற்று போகிறாள்.



Episode III : 5 Centimeters Per Second

          சில வருடங்களுக்கு பிறகு., டகாகி கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக டோக்கியோவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். சுமேடா இன்னும் உன்னை காதலிக்கிறேன் என டகாகிக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்க்கும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் வேலை காரணமாக டோக்கியோவுக்கு பயணமாகிறார் அகாரி. ஒரு முறை ரெயில்வே கிராஸிங்கை தாண்டி செல்லும் போது எதிரில் வந்த பெண் அகாரியாக இருக்குமோ என திரும்பும் போது சரியாக அதே நொடியில் ஒரு ரெயில் வந்து பார்க்க விடாமல் செய்கிறது. அப்போது ரொம்ப ரொம்ப அழகான பாடல் வருகிறது. அப்பாடல் முடிந்ததும் அந்த பெண் அகாரியா ? இருவரும் இணைந்தார்களா ?  போன்ற விஷயங்களை எல்லாம் திரையில் காண்க..,

     இந்த கதையை படிக்கும் போது இது ரொம்பவும் சாதாரணமாக இருப்பதாக நீங்கள் உணரலாம் ஆனால் திரையில் இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் ரொம்பவே அதிகம். காதலை பிரிந்ததால் ஏற்படும் தனிமையையும் , பழைய காதலை நினைக்கும் போது ஏற்படும் துக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த கலைவையான உணர்ச்சியையும் அழகான காட்சிகளின் மூலம் வெகுசுலபமாக பார்வையாளனுக்கு கடத்தி விடுகிறது. சிறுவயதில்  நெருக்கமாய் இருந்தவர்கள் செல்ஃபோனும் இணையமும் இல்லாமல் கால ஓட்டத்தில் காணாமல் போனதை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்டுகிறது. படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு முக்கிய பாத்திரங்கள் மூவரும் அவர்கள் மனதுக்குள் நினைப்பதே வசனங்களாக வருகிறது. பெரும்பாலான வசனங்கள் க்யூட்டான கவிதையாக இருக்கின்றன.


          படம் முழுவதுமே நட்பு, பிரிவு, தனிமை,  ஏக்கம், காதலை நோக்கி பயனித்தல், காதலுக்காக காத்திருத்தல் என காதலின் அத்தனை உணர்வுகளையும் கொண்டு காட்சிகளை நிரப்பி படம் முழுவதுமே படுரொமாண்டிக்காக இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததை போல் வருகிறது அந்த கிளைமேக்ஸ் பாடல் அதுவரை படம் ஏற்படுத்திய உணர்வுகளை இன்னொரு லெவலுக்கு இந்த பாடல் எடுத்து செல்கிறது அதிலும் அந்த பாடல் வரிகள் அற்புதம் (அந்த மொழி தெரியுமான்னு கேக்க கூடாது எல்லாம் சப்டைட்டில் தான் :) ). முதன்முறையாக என் கம்ப்யூட்டரில் ஒரு ஜப்பானிய பாடல் திரும்ப திரும்ப ஓடி கொண்டிருக்கிறது. அந்த அற்புதமான பாடல் உங்களுக்காக..,


படத்தின் இன்னுமொரு முக்கிய ப்ளஸ் இதில் வரும் அனிமேஷன் அதுவும் ரொம்பவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது. ரொம்பவே டெம்ப்ளேட்டாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே நாம் மறக்கும் அளவிற்க்கு இருக்கிறது. நான் பார்த்த மிக சிறந்த 2D அனிமேஷன்களில் இந்த படத்தின் அனிமேஷனையும் எந்த யோசனையுமின்றி சேர்த்து கொள்வேன். இந்த படத்தை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் Makoto Shinkai என்ற ஜப்பானிய இயக்குநர். ஜப்பானிய விமர்சகர்கள் இவரை அடுத்த மியாசாகி என்றுழக்கும் அளவிற்க்கு நம்பிக்கை தருபவராக இருக்கிறார்.

    எவ்வளவோ யோசித்தும் குறையென்று எதுவும் சொல்ல தோன்றவில்லை அவ்வளவு பிடித்துவிட்டது. ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் ஒரு மணிநேரம் மட்டும் செலவு செய்து இந்த படத்தை பாருங்கள் அட்லீஸ்ட் ஒரு நாளுக்காவது அந்த பாதிப்பு இருக்கும் நிச்சயமாக...


     
          
[ Read More ]

சகுனி - 1 Line Review


Only One Line :
          கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில் இருந்தும் நெய் வடியுமாம்..,

Verdict : போய்டாதிங்ங்ங்ங்ங்ககக....,

கொசுறு :
படத்தின் ஒரே ஆறுதல் ஒன்பதே முக்கா நிமிஷம் வரும் பிரணிதா..,

[ Read More ]

மறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,

            ஒரு புத்தகமோ திரைப்படமோ காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பதற்க்கு மறுவாசிப்பும் மீள்பார்வைகளும் மிகவும் அவசியமாகின்றன. நமக்கு பிடித்த எல்லா புத்தகத்தையும் திரைப்படத்தையும் இன்னொரு முறை ஸ்பரிசிக்க அத்தனை சுலமபாய் தோன்றிவிடுவதில்லை. பெரும்பாலவானவற்றை மீண்டும் பார்க்க கூடாதென முடிவெடுத்தாலும் வெகுசிலவற்றை தான் "கொய்யால உசுரே போனாலும் பாக்க கூடாதுடா"ன்னு கங்கணம் கட்டிக்குவோம். அந்த அளவுக்கு என்னை உசுப்பேத்திய நான்கு படங்களை பற்றிய சிறு பார்வைதான் இந்த வெட்டி பதிவின் நோக்கம். நான்கு படங்களுமே முற்றிலும் வெவ்வேறு வகையானவை நான்கும் வெவ்வேறு மொழிகள் , வெவ்வேறு Genre, வெவ்வேறு வகையில் என்னை பாதித்தவை வெட்டி பில்டப்புகள் போதும் என நினைக்கிறேன் மேற்கொண்டு படிச்சிட்டு இந்த படங்களை பார்ப்பதா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,

A Serbian Film :
       
          இளகிய மனது உடையவர்கள் , சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படுபவர்கள் , கலாச்சார காவலர்கள், 15 வயதுக்கு குறைவானவர்கள், இந்த படத்தின் பேர் கேட்டாலே எரிச்சலடைபவர்கள் அனைவரும் இந்த படத்தையும் அடுத்த படத்தையும் ஸ்கிப் செய்வது அனவருக்கும் நல்லது..,

          ஒரு முன்னால் நீலப்பட நடிகனான நாயகன் ரொம்பவும் பண கஷ்டத்தில் இருக்கிறான் மகனின் பள்ளி செலவுக்கு கூட பாக்கெட்டை தடவும் நிலை. அவனுக்கு ஒரு கலைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது அதன் மூலம் அவனுக்கு பெரும் தொகையும் கிடைப்பதால் சம்மதிக்கிறான். உண்மையில் அது கலைப்படம் அல்ல அது ஒரு Snuff Film என தெரிய வருகிறது.அப்புறம் என்ன நடக்கிறது என்பது தன் படத்தின் கதை. அது இன்னாப்பா Snuff Film ன்னு கேக்குறிங்களா ? அது ஒண்ணுயும் இல்ல எல்லா நிலப்படத்தையும் போலவே மேட்டர் நடக்கும் அதுவும் கொடூரமாய் கடைசியாய் இருவருமோ அல்லது ஒருவரோ கொலை செய்யப்படுவார்கள். ஆம், நிஜமாகவே கொலை செய்யப்படுவார்கள். இதற்க்கே அதிர்ச்சி அடைபவர்கள் அடுத்த பத்தி போகாமல் அப்பீட்டாவதே நல்லது..,

         குடும்ப அமைப்பில் வாழ்ந்த எந்தவொரு மனிதனாலும் அத்தனை சுலபத்தில் ஜீரணிக்க இயலாத காட்சிகள் நிறைந்த படமாகும். கர்பமாக இருக்கும் பெண்ணுக்கு ஒரு தடியன் பிரசவம் பார்க்கிறான் அப்போது பிறக்கும் குழந்தையை அதே தடியன் கற்பழிக்கிறான்.., எஸ், புதிதாய் பிறந்த குழந்தையை தான். இன்னொரு காட்சியில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்ணை ஒருவன் கற்பழித்த படியே வெட்டி கொள்கிறான், போதை மருந்து அதிகம் செலுத்தப்பட்ட ஹீரோ மயக்கமடைந்து இருக்கும் தன் மகனையே கற்பழிக்கிறான்.., இதெல்லாம் கூட பரவாயில்லை (என்னது பரவாயில்லையா ??) கிளைமேக்ஸில் ஹீரோ , அவனின் மனவி மற்றும் மகன் இறந்து கிடக்க அப்போது ஒரு தடியன் "let's start with the small one" அப்புடின்னு சொல்லுவான் பாருங்க என்ன சொல்றது அப்புடியே உறைஞ்சு போய்ட்டேன்.., இந்த படம் பாருங்கன்னு யாருக்கும் சிபாரிசெல்லாம் பண்ணல இதெல்லாம் படிச்சதுக்கு அப்புறமும் பாக்கனும்ன்னு தோணிச்சுன்னா பாருங்க..,

Audition :

         இந்த படத்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்க வைத்த காட்சி..,
        " காதலி , செகரக்டரி, மகனின் காதலி, வேலைக்காரி என தனக்கு தெரிந்த அத்தனை பேருடனும் நாயகன் உறவு கொள்வதை போல காட்சிகள் மாறி மாறி சர்ரேலிஸ சாயலுடன் காட்சிகள் ஓடுகின்றன. மயக்கம் தெளிந்து ஓர் புதிய இடத்தில் விழிக்கிறான் பக்கத்து அறையில் அவன் காதலி வாந்தி எடுத்து கொண்டிருப்பது தெரிகிறது. அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவனருகில் இருந்த மூட்டை துள்ளி குதிக்கிறது. அந்த மூட்டையில் இருந்து மனிதனை ஒத்த ஒரு உருவம் வெளிவருகிறது. ஆம் அவன் மனிதன் தான் ஆனால் இரண்டு பாதங்களும் வெட்டப்பட்டு , நாக்கு அறுக்கப்பட்டு ,  கைகளில் முக்கிய மூன்று விரல்கள் வெட்டப்பட்டு மனித உருவமே சிதைக்கப்பட்ட மனிதன். அவன் தன் வெட்டப்படாத விரலை கொண்டு அருவெருப்பான முறையில் நாயகியை அழைக்க அவள் தான் எடுத்த வாந்தியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வருகிறாள். பல நாள் பழைய சோத்தயே பாக்காதவன் பந்திக்கு பாய்வது போல் பாய அவள் அந்த வாந்தியை கிழே வைக்க நாக்கில்லா தன் வாயால் அவன் அதை  வாய் வைத்து உறிந்து குடிக்க..," ஹீரோயின் வாந்தி எடுத்தாங்களோ இல்லையோ எனக்கு கொமட்டிட்டு வந்துடுச்சு..,

           பிரபல ஜப்பானிய இயக்குநர் Takishe Mike இயக்கிய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. மேற்கூறிய காட்சிகளை தொடர்ந்து வரும் 10 நிமிட டார்ச்சர் சீன் ரொம்ப ஃபேமஸ். டார்ச்சர் என்றதும் ரத்தம், கொடூரம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் வெறும் குண்டூசியை வைத்தே டரியல் காட்டி இருப்பார்கள். அந்த வாந்தி காட்சியை மட்டும் பொறுத்து கொண்டால் ஒரு அட்டகாசமான திரில்லர் பார்க்கலாம்.இங்கே கொடுக்க போகும் லிஸ்ட்டில் நான் சிபாரிசு செய்யும் ஒரே படம் இது தான்.

Seven Pounds : 

        படம் பார்ப்பவனின் சட்டையை கொத்தோடு பிடித்து  திரைக்குள் இழுத்து கண்ணுக்குள் க்ளிசெரின் ஊத்தும் கொடுமையை அனுபவித்தது உண்டா ?. ஒரே ஒரு முறை அனுபவித்து பார்க்க விருப்பமா ? ஆம் எனில் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய பட பட்டியலில் உடனடியாக இணைத்து கொள்ளவும்..,  படத்தோட கதை என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முன்னால முரளி மற்றும் லைலா நடித்து வெளிவந்த "காமராசு" என்ற திரைப்படம் நினைவிருகிறதா இல்லைன்னாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. ரெண்டுமே கிட்டதட்ட ஒரே கதை தான் காமராசுல விசுவாசத்துக்காக முரளி தன் உடம்புல இருக்குற அத்தனை பாகத்தையும் தானம் குடுத்துட்டு மர்கயா ஆகிடுவார். இந்த படத்துல வில் ஸ்மித் குற்ற உணர்ச்சியால் தானம் குடுத்துட்டு போய் சேர்வார்.

      Persuit of Happyness படத்தின் இணை மறுபடி இணைந்த படமென்பதால் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. படம் ஆரம்பித்த கணம் முதல் இயக்குநரும் வில் ஸ்மித்தும் நம்மை இம்சிக்க தொடங்கி விடுகின்றனர். செயற்க்கையான காட்சிகள் , மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, வலிந்து திணிக்கப்பட்ட செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பாடாவதி ட்விஸ்ட் என சகிக்கவே முடியாத படமாக இருக்கிறது. டி.வி சீரியல்களை அழுது கொண்டே பார்க்கும் வழக்கம் உள்ளவர் எனில் தவறாமல் பார்க்க வேண்டிய கண்ணீர் காவியம்.

மனம் கொத்தி பறவை :


           ராஜா, அமுதே, தீபாவளி போன்ற கொடூர மொக்கை படங்களின் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் என நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நகைச்சுவை படம் என்ற விளம்பரம் பார்த்து ஏதேவொரு குருட்டு தைரியத்தில் படத்துக்கு போன என்னை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கதற கதற மொக்கை போட்டனர்.

       படத்தில் வரும் ஜோக்குகெல்லாம் இயக்குநருக்கே சிரிப்பு வந்து இருந்தால் ஆச்சர்யம். படம் தான் மொக்கை ஹீரோயினையாவது சைட் அடிக்கலாம்ன்னு பாத்தா ஏதோவொரு ஆண்டி ஹீரோயினாய் போட்டு கடுப்பேற்றி விட்டனர் பட்ஜெட் ப்ராப்ளம் போல. சீரியஸான காட்சியா நகைச்சுவை காட்சியா என நடித்தவர்களுக்கே தெரியாத காரணத்தால் பார்க்கும் நமக்கு புரிவதற்க்கான நியாயம் கிடையாது. சமீபகாலத்தில் இப்படி ஒரு கேனத்தனமான படத்தை பார்த்ததில்லைன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன் அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன். நெஞ்சுல தெடமும் திராணியும் இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும்..,
[ Read More ]

சந்தியாராகம் [தமிழ்/1989] - பாலு மகேந்திராவுடன் ஒரு நாள்


”யாரும் யாருக்கும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை அனைவருமே சமம்” இந்த வரியை நீங்கள் படிப்பது நிச்சயமாய் முதல்முறையாக இருக்காது அறிவுரையாகவோ பாடமாகவோ வாழ்வில் ஒரு முறையேனும் கேட்டு இருப்பீர்கள் ஆனால் வாழ்வில் எந்த ஒரு கணத்திலாவது இதை கடைப்பிடித்திருப்போமா என கேட்டால் இல்லை என்பதே நம் அனைவரின் பதிலாக இருக்கும்.  வயது, பணம், அறிவு ஆகிய சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில் நாம் அனைவரும் பிறரை எப்பவுமே நம்மை விட உயர்வாய் நினைக்க எல்லா தருணங்களிலும் தயாராக இருக்கிறோம் ஆனால் நம் தாத்தாக்கள் முக்கியமாக நினைத்த விஷயங்கள் நமக்கு முக்கியமானதாக இல்லை. சமூக மதிப்பீடுகளின் வடிவங்கள் மாறுகின்றன தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

சென்ற தலைமுறை வயதுக்கு கொடுத்த மரியாதைக்கும் இந்த தலைமுறை கொடுக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசம் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அறுபது வயது வரை நல்ல வேலையில் உள்ள ஒருவருக்கு குடும்பத்திலோ வெளியிலோ கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் ஓய்வுக்கு பிறகும் கிடைக்கப்பெற்றால் அவர்களெல்லாம் நிச்சயமாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆனால் ஆசிர்வாதமோ அதிர்ஷ்டமோ அத்தனை சுலபமாய் கிடைப்பதில்லை. பணமே பிரதான இலக்காக கொண்ட சமூகம் பணம் ஈட்ட இயலாத வயதானவர்களை சுலபமாக தனிமைப்படுத்தி விடுகிறது அல்லது அருவெருப்புடன் சேர்த்துக்கொள்கிறது. தன் தாய் தந்தையரிடம் கூட பேச நேரமின்றி இயந்திர சக்கரத்தின் பல்முனை போல் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவதேயில்லை அவர்களுக்கும் வயதாகும் என்று..,



  வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமை, தங்களுக்கான மதிப்பு குறைவதால் வரும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம் மற்றும் அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள் அந்த அழுத்தங்களின் தாக்கத்தால் ஏற்படும் உறவு சிக்கல்கள் என 80 வருட தமிழ்சினிமா சரித்திரத்தில் எந்தவொரு திரைப்படமும் தொட்டுப்பார்க்க துணியாத விஷயங்கள் அத்தனையையும் தொட்டு செல்கிறது பாலு மகேந்திராவின் “சந்தியாராகம்”.

கிராமத்தில் வாழ்ந்து வரும் 84 வயதான சொக்கலிங்கம் தன் மனைவி இறந்துவிட்ட காரணத்தால் சென்னையில் இருக்கும் தன் அண்ணன் மகன் வாசுவின் வீட்டிற்க்கு வருகிறார். வாசு அவருடைய கர்ப்பமான மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள மாதம் 20 தேதிக்கு பிறகு கடன் வாங்கி காலத்தை ஓட்டும் வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பம். வாசுவும் அவரது மனைவியும் சொக்கலிங்கத்தை நன்றாகவே கவனித்து கொள்கின்றனர் ஆனாலும் தவிர்க்க முடியாத ஒரு சமயத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வாசுவின் மனைவி முயற்சித்து கொண்டே இருக்கிறார். கடைசியாக வந்தாரா இல்லையா என்பதை திரையில் காண்க ..,

சொக்கலிங்கமாக நடித்துள்ள சொக்கலிங்க பாகவதர் அவரது மருமகளாக நடித்துள்ள அர்ச்சனா இருவருமே கொஞ்சமும் கூட குறைய இல்லாமல் நடித்து இருக்கின்றனர். குறிப்பாய் சொக்கலிங்க பாகவதர் சின்ன சின்ன ரியாக்ஸன்களில் கூட அசத்துகிறார் பல இடங்களில் உங்கள் தாத்தாவை ஞாபக படுத்தலாம். இத்தனை சிறந்த நடிகரை பாலு மகேந்திராவை தவிர யாரும் பயன்படுத்தியதாய் தெரியவில்லை. கறுப்பு வெள்ளையிலும் கூட பாலு மகேந்திராவின் கேமரா ஆளுமை நிறைய இடங்களில் பளிச்சிடுகிறது. வழக்கமாய் தமிழ்சினிமாவில் வைக்காத பல ஷாட்கள் படத்தில் உள்ளது குறிப்பாக படம் முடியும் போது வைக்கப்படும் கடைசி ஷாட் .., சும்மா புகழ வேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை நிஜமாகவே அற்புதமான ஷாட். Tree of Life போன்ற படங்களில் இந்த மாதிரி ஷாட் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அந்த படங்கள் ஹாலிவூட் பட்ஜெட்டில் வண்ண கலவையோடு கொண்டு வந்த அழகியலை பத்து லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கறுப்பு வெள்ளையிலையே கொண்டு வந்துள்ளார். 


சில வருடங்களுக்கு முன்பு தமிழின் மிக முக்கியமான படங்கள் என்று விமர்சகர்களால் எடுத்தாளப்படும் படங்களை பார்க்கலாம் என சிறுப்பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தேன். அந்த படங்களை டி.வி.டி-யாக வாங்கவோ இணையத்தில் தரவிறக்கவோ முயற்சி செய்த போது கடும் ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலன படங்கள் எந்த வடிவத்திலும் கிடைக்கவே இல்லை சரியாக சொல்ல வேண்டுமென்றால் கிடைப்பதற்க்கான வாய்ப்புகளே இல்லை. அப்படி இனி பார்க்கவே முடியாது என நினைத்திருந்த படங்களில் சந்தியா ராகமும் ஒன்றாம் ஆனால் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த இந்த படத்தை தமிழ் ஸ்டூடியோ குழுவினர் நடத்திய அரிய திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வில் தான் காண நேர்ந்தது அதுவும் சாதாரணமாக அல்ல படத்தின் இயக்குநர் திரு, பாலு மகேந்திரா அவர்களுடன் ஒரே அரங்த்தில்.., சில சமயங்களில் காத்திருப்பதற்க்கும் ஒரு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இந்த திரைப்படம் இணையத்திலோ பர்மா பஜாரிலோ கிடைக்கவில்லை. இந்த திரையிடல் கூட பாலு மகேந்திரா அவர்களின் தனி சேமிப்பில் இருந்த குறுந்தகடு மூலமாக தான் நடைப்பெற்றது.

படம் முடிந்த பின்னர் ஒரு சிறு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது அதன் பின்னர் பாலு மகேந்திரா பேசினார் எதிர்ப்பார்த்ததை விட இயல்பாகவும்  சமயங்களில் உணர்ச்சிகரமாகவும் பேசினார்.

வணிக நோக்கங்கள் ஏதுமில்லாமல் நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ் ஸ்டூடியோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ் ஸ்டூடியோவின் இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக்கவும்.

மொத்ததில், தமிழில் இப்படியும் ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது சந்தியாராகம். எப்போதாவது தமிழின் சிறந்த படங்களை நான் பட்டியலிட நேர்ந்தால் சந்தியாராகமும் தவறாமல் முக்கிய இடத்தில் இருக்கும்.தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களில் இந்த படத்தை திரையிடுவதாக மேடையில் கூறினார்கள் அப்படி உங்கள் ஊரில் திரையிட்டால் தயங்காமல் குடும்பத்துடன் சென்று பாருங்கள்.
[ Read More ]